தீவிரவாதத்தை தடுக்கத் தவறியது ஏன்?: அரசுக்கு சிபிஎம் கேள்வி
டெல்லி: நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் அதைத் தடுக்கத் தவறியது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாதம் தொடர்ந்து பாதித்து வருகிறது. தாக்குதல்கள், வெடிகுண்டுச் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. ஆனால் இத்தனைக்கும் பிறகும் தீவிரவாதத்தை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. தீவிரவாதிகளை வேரறுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.
நமது நாட்டின் புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகள் பலவீனமடைந்து விட்டனவா என்பதையும் அரசு விளக்க வேண்டும். உளவுப் பிரிவுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்னவாயிற்று என்பதையும் விளக்க வேண்டும்.
அகமதாபாத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் தீவிரவாத கட்டமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் மத கலவரத்ைத தூண்ட அவை திட்டமிடுகின்றன.
அகமதாபாத்தில் இரு மருத்துவமனைகள் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவையும் தீவிரவாதிகள் விட்டு வைக்கவில்லை. இதன் மூலம் அவர்களின் இரக்கமற்ற, கொடூர மனப்பான்மை தெரிய வருகிறது.
முதலில் ஜெய்ப்பூர், பின்னர் பெங்களூர், அடுத்த நாளே அகமதாபாத் என தீவிரவாதிகள் சுதந்திரமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் அமைதி காத்து, வெளிநாட்டு சக்திகளின் சதிச் செயல் பலித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதத்தால் பிரிவினை ஏற்பட்டு மோதல்கள் மூண்டு விடாமல் பொறுமை காக்க வேண்டும். சகிப்புதன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications