திமுகவை திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்-ராமதாஸ்
சென்னை: திமுகவுடன் கூட்டணி சேர நூற்றுக்கு நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. அவர்களாக கூப்பிட்டாலும் திரும்பி பார்க்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாமகவின் 20வது ஆண்டுவிழா பொதுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
அரசு ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்கிறது. தரமணியில் டாடா நிறுவனத்துக்கு 26 ஏக்கர் நிலம் ஏக்கர் நிலம் கொடுக்கிறார்கள். கேட்டால் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குத்தான் என்கிறார்கள். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 50 லட்சம் பேரில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. இதையெல்லாம் கேட்டால், கோபமடைந்து பாமக குழிப்பறிக்கிறது என்கிறார்கள். நேற்று கூட மரம் நடத்தான் குழி பறித்தோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஒரே மாதத்தில் சென்னையில் மட்டும் 28 கொலைகள் நடந்துள்ளன. இங்கு சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. காமராஜர் எல்லாரையும் படிங்க என்றார். இந்த அரசு எல்லாரையும் குடிங்க என்கிறது.
சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் ரூ.15 உயர்நதுள்ளது. ஏழை மக்கள் ஒரு கழிப்பறை கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர். அரசுடையாக்க வேண்டு்ம் என்கிறார்கள். ஆனால் ஆக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வருகிறோம்.
எங்களை வன்முறை கட்சி என்கிறார்கள். எங்கள் கட்சியில் யாரும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் நாங்களே அரசிடம் காட்டிக் கொடுத்துவிடுவோம். ஏனென்றால் அது நம் சொத்து.
ஐந்து முறை ஆட்சிக்கு இருந்து என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்தார் என்பதை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா உயர்கல்வி தனியாரிடம் போய்விட்டது. கச்சத்தீவு மீட்காமல் போனதற்கு திமுகதான் காரணம்.
மக்களின் சாபம் என்றால் அது ஆற்காடு வீராசாமிக்குத்தான். அது அவருக்கு கேட்காது. இனி திமுகவுடன் உறவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் கிடையாது. அவர்களாக அழைத்தாலும் சுயமரியாதை உள்ள நாங்கள் திரும்பி கூட பார்க்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications