சூரத்தில் இன்று 14 குண்டுகள் கண்டுபிடிப்பு-மேலும் ஒருவர் கைது

லாதேஸ்வர் சொசைட்டி என்ற இடத்துக்கு அருகே ஒரு குண்டும் மார்க்கெட் பகுதியில் ஒரு குண்டும் வராச்சா ரோடு மாதாவதி பகுதியில் ஒரு குண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.
இவை தவிர மேலும் பல இடங்களிலும் சேர்த்து 14 குண்டுகள் சிக்கின.
ஏற்கனவே இந்த நகரில் 3 வெடிகுண்டுகளும், வெடி பொருட்கள் நிறைந்த 2 கார்களும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் இன்று மட்டும் புதிதாக 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
அகமதாபாத்தில் மேலும் ஒருவர் கைது:
இந் நிலையில் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஏராளமான வெளிநாட்டு பணத்துடன் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை 16 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 49 பேர் பரிதாபமாக பலியாயினர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக அப்துல் ஹலீம் என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல் ஹலீமை, 14 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அகமதாபாத் குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ஆசிஷ் பாட்டியா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தீவிரவாதியான அப்துல் ஹலீமிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள லிம்பிட் நகரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டு இருந்த ஒரு நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் ஏராளமான இந்திய ரூபாயும், வெளிநாட்டு பணமும் இருந்தது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட்டு காரில் வெடிகுண்டு:
சூரத் நகரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்கள் பிடிபட்டதை தொடர்ந்து, விசாரணைக்காக அகமதாபாத்தில் இருந்து குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து இருக்கிறார்கள். ஆமதாபாத்திலும், சூரத் நகரிலும் குண்டு வைப்பதற்காக 4 கார்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
மும்பையில் உள்ள நவி மும்பை பகுதியில் இருந்து திருடிக் கொண்டு வரப்பட்ட இந்த கார்களை போலி பதிவு எண்ணுடன் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆசிஷ் பாட்டியா கூறினார்.
பழைய சைக்கிள்கள்:
குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சைக்கிள்கள் பழைய சைக்கிள்கள் என்றும், இது தொடர்பாக சில சைக்கிள் கடைக்காரர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராய்ப்பூர் பகுதியில் வெடிகுண்டு சைக்கிளை நிறுத்திய நபரை பார்த்ததாக கூறும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.
உருவப் படம் வெளியீடு:
இதற்கிடையே அகமதாபாத்தில் குண்டுவெடிப்புகள் நடத்தியது தொடர்பாக, தேடப்படும் குற்றவாளி ஒருவரின் படம் கம்ப்யூட்டர் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அவரை நேரில் பார்த்தவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் படம் வரையப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications