திமுக-அதிமுக இல்லாத கூட்டணி: சோனியாவிடம் ராமதாஸ் வலியுறுத்தல்
டெல்லி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக அல்லாத புதிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்றதற்கு சோனியாவுக்கு வாள்த்து தெரிவித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினார்.
அப்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்க வேண்டும் என ராமதாஸ் கோரியதாகத் தெரிகிறது.
இலங்கை- பிரதமருக்கு கோரிக்கை:
இதையடுத்து பிரதமரை சந்தித்த ராமதாஸ், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரை தாக்கி வருவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்த அவர், கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிம் கடிதம் அளித்தார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உணவு தானியங்களின் ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்து வினியோகத்தையும், விலைகளையும் முறைப்படுத்த மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் அதிகாரம் வழங்கி அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி உற்பத்தி வரிகளை மேலும் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலைகளையும் குறைக்க வேண்டும்.
பெரிய மாநிலங்களை சிறிய மாநிலங்களாக பிரித்து மாநில ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண வேண்டும்.
18 மாநில மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்க வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிலைக்குழு அமைத்தல், பின்னடைவு பணியிடங்களை நிரப்புதல், நீதித்துறையில் இட ஒதுக்கீடு ஆகிய நடவடிக்கைகள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார் ராமதாஸ்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கச்சத் தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தபோது திமுக எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது அந்த பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதையும் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக அல்லாத புதிய கூட்டணி அமைய வேண்டும். அப்படி ஒரு கூட்டணியை மக்களும் விரும்புகிறார்கள். அந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும்.
அதில் பா.ம.க.வும் நிச்சயமாக இடம்பெறும். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என்பதில் பாமக ஆர்வமாக உள்ளது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications