குண்டு வெடிப்புகளை மத்திய அரசே நடத்தியது-பாஜக
டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எம்பிக்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தை திசை திருப்ப மத்திய அரசே தான் பெங்களூர், அகமதாபாத்தில் குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்க வேண்டும் என தான் சந்தேகிப்பதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறினார்.
தமிழகத்தி்ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நெடுஞ்சாலைகளில் தொடர் கொள்ளைகள் நடந்தன. இதையடுத்து சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, தனது அரசின் பெயரைக் கெடுக்க இந்தக் கொள்ளைகளை மத்திய அரசே நடத்துவதாக அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மீது பழியைப் போட்டார்.
கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு குற்றச்சாட்டை சுஷ்மா கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பாஜக தலைவர் அத்வானி வீட்டில் நடந்தது. இதன் பி்ன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ்,
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எம்பிக்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தை திசை திருப்ப இந்த குண்டு வெடிப்புகளை மத்திய அரசே நடத்தியுள்ளதாக நான் சந்தேகிக்கிறேன். அதற்கான போதிய சந்தர்ப்ப சூழல் ஆதாரங்கள் உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களி்ல் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதன் பின்னணியில் பெரும் சதி உள்ளது என்றார்.
நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சாட்டுகிறீர்களா என்று கேட்டதற்கு, நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். அதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள் தான் என்றார்.
பாஜகவுக்கு பைத்தியம்-காங்கிரஸ் கடும் தாக்கு:
ஆனால், சுஷ்மாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில்,
பாஜகவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இல்லாவிட்டால் இப்படிப்பட்ட பேச்சை அக் கட்சியின் மூத்த தலைவர் பேச மாட்டார். அவர் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுஷ்மாவின் பேச்சு வெட்கக்கேடானது. முதலில் நாடாளுமன்றத்தில் பணத்தைக் கொட்டி நாட்டின் மானத்தை அத்வானி வாங்கினார். இப்போது இப்படியெல்லாம் பேசி, தங்கள் மானத்தையே வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications