என்னை உள்ளே தள்ள திட்டம்-விஜய்காந்த்
சென்னை: நான் ஏதாவது பேசமாட்டேனா, உள்ளே பிடித்துப் போட முடியாதா? என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். திமுக, அதிமுகவினர் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு போயிருக்கிறார்கள். நான் மக்களுக்காக சிறைக்கு செல்லத் தயார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேமுதிக தொண்டரணிச் செயலாளராக இருந்த பாலாஜி கடந்த சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு திமுக பிரமுகர்களே காரணம் என்று பாலாஜியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந் நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜய்காந்த், ஊரப்பாக்கத்தில் உள்ள பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ரூ. 25,000 நிதியுதவியும் வழங்கினார். மேலும் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகவும் அறிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். அப்பாவிகளை கைது செய்யக்கூடாது.
குற்றவாளிகளுக்கு போலீசார் துணை போகிறார்கள். திமுக ஆட்சியில் திமுக போலீஸ் என்றும், அதிமுக ஆட்சியில் அதிமுக போலீஸ் என்றும் காவல்துறை செயல்படுகிறது. காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
கொலையில் சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்யக்கோரி தேமுதிகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி பிரயோகம் நடத்தியிருக்கிறார்கள்.
நான் ஏதாவது பேசமாட்டேனா? உள்ளே பிடித்து வைக்க முடியாதா? என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். எந்த மிரட்டலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்.
திமுக, அதிமுகவினர் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு போயிருக்கிறார்கள். நான் மக்களுக்காக சிறைக்கு செல்லத் தயார். எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், நானே தர்ணா போராட்டம் நடத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications