புதுச்சேரியில் தனியார் பஸ்கள் திடீர் ஸ்டிரைக்
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று தனியார் பேருந்துகள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 24 ஆம் தேதி விஜயகுமார் என்ற தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர் கபாலி (எ) தனஞ்செயனுக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கபாலியை 3 இளைஞர்களும் தாக்கியுள்ளனர். கபாலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கபாலியைத் தாக்கியவர்கள் மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களும், அலுவலகத்திற்குச் செல்வோரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.
மிகவும் சிறிய மாநிலமான புதுச்சேரியில் அடிக்கடி பேருந்து ஸ்டிரைக் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இங்கிருந்து வேளாங்கன்னி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூரிலிருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாகச் சென்னை செல்லும் பேருந்துகள் புதுச்சேரி வழியாகத்தான் செல்லவேண்டும்.
மேலும் ஜிப்மர் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, பிம்ஸ் மருத்துவமனைகள் இங்கு உள்ளன. இதனால் புதுச்சேரியோடு தமிழக மக்களும் இதுபோன்ற ஸ்டிரைக் போராட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காகவும், பேருந்து டிக்கட் கட்டணம் ஏற்றுவதற்காவும், பொதுமக்கள் பிரச்சினைக்காகவும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பலமுறை ஸ்டிரைக் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு நாள் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. புதுச்சேரியைப் பொறுத்தவரை அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிகம். மேலும் அலுவலக நேரங்களில் தனியார் பேருந்துகள்தான் அதிகளவில் இயக்கப்படுகிறது. இதுபோன்ற திடீர் ஸ்டிரைக்கால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications