பாதுகாப்பு வளையத்தில் கோவில்கள், ரயில்கள்
மதுரை: தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்கள் அனைத்தும் வரலாறு காணாத பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களை தீவிரவாதிகள் தாக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நெல்லையிலும், சென்னையிலுமாக வெடிகுண்டுகள் வைக்க திட்டமிட்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தென்தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு இந்தக்கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெட்டல் டிடெக்டர் மூலம் அனைத்து நுழைவாயில்களிலும் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
கோவிலில் உள்ள ஐந்து கோபுரங்களும் இன்டர்காம் மற்றும் வயர்லஸ்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் படையினர் கோவிலில் நிலை கொண்டுள்ளனர். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வெடிகுண்டு சோதனை கோவில் முழுவதும் நடத்தப்படுகிறது.
மதுரை தவிர ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார் கோவில், கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்டவை பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு புலனாய்வுப் படைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு:
இதேபோல தெற்கு ரயில்வேயும் தனது எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. அனைத்து ரயில்களும் பக்காவாக சோதனையிடப்படுகின்றன.
மாநில போலீஸாருடன் இணைந்து ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரங்கள், தண்டவாளங்களில் குண்டுகள் இருக்கிறதா என்பது குறித்து சோதனையிடப்படுகிறது. பயணிகள் காத்திருக்கும் அறைகள், டிக்கெட் வழங்கும் கவுன்டர்கள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளை மூத்த அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்து முடுக்கி விட்டு வருகின்றனர்.
ரகசிய கேமராக்கள் மூலமும், சாதாரண உடையில் உலா வரும் போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோப்ப நாய் படையும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை நகரில் உள்ள இரு ரயில் முக்கிய ரயில் நிலையங்களான எழும்பூர் மற்றும் சென்டிரல் தவிர மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் சோதனையிடப்படுகின்றனர். அவர்கள் கொண்டு வரும் லக்கேஜுகள் தீவிர ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சந்தேகப்படும்படியான பொருட்கள் இருந்தால் தெரிவிக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்யும் பெட்டிகளில் பயணிப்போரும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், மெயில்கள், மின்சார ரயில்களில் ரயில்வே போலீஸார் துப்பாக்கி சகிதம் பாதுகாப்புக்கு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications