தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு: ஜஸ்வந்த் சிங் பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் கூறினார்.
சென்னையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
நாடு இப்போது நான்கு அடிப்படையான பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன். அவை, ஆட்சி முறையில் சீர்கேடு, உள்நாட்டு பாதுகாப்பில் குறைபாடுகள், வெளிநாட்டில் இருந்து பாதுகாப்புரீதியான அச்சுறுத்தல்கள், பொருளாதார நிலையற்றதன்மை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு, முன்பு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இருந்தது. தற்போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். நாளை தேவைப்பட்டால் அமெரிக்காவுடனோ அல்லது வேறு யாருடனோ கூட கூட்டு வைப்பார்கள்.
எம்பிக்களை விலை கொடுத்து வாங்கப்படும் கேலிக்கூத்தை என்னுடைய 40 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. இதுபோன்ற கீழ்த்தரமான நிலை ஏற்படும் என்று நான் நினைத்தது கூட இல்லை.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதில் பாஜகவுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், ஒரு உடன்பாடு ஏற்பட்டால் அதன் இரு பக்கமும் சமமானதாக இருக்க வேண்டும். அவர்களின் அடிமை போல நாம் இருக்கக் கூடாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் தடையை எதிர்த்துத்தான் 1998ல் அணுகுண்டு சோதனையை நாங்கள் நடத்தினோம். யாருக்கும் அடிபணியவில்லை. நாட்டின் பாதுகாப்பும், கெளரவமும் தான் அரசுக்கு முக்கியம்.
அப்போது இந்த திட்டத்தை எதிர்த்த மன்மோகன் சிங், அணு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார் என்பதுதான் ஏன் என்று புரியவில்லை என்றார்.
பேட்டி:
முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தீவிரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா, நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் நிலவும் சூழ்நிலையும் நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சேதத்தை பார்வையிடக் கூடச் செல்லவில்லை. வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகம் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்திய நாட்டின் மீதும், இந்திய மக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது அரசியல் பிரச்சினை அல்ல. பொதுமக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக் கூடாது. பயங்கரவாதத்தை தடுக்க கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரலாம். ஆனால், பொடா சட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு...
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை தமிழகத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. அதற்காக மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications