மாணவர்களுக்கு ரூ.4000க்கு லேப்-டாப்: மத்திய அமைச்சர்
டெல்லி: நாடு முழுவதும் மாணவர்களுக்கு ரூ.4000க்கு மலிவு விலையில் லேட்-டாப் கம்ப்யூட்டர் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி தெரிவித்தார்.
டெல்லியில் நடந்து வரும் இ-இந்தியா 2008' என்னும் சர்வதேச தகவல் தொழில் நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது:
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, நாட்டின் சமூக பொருளாதாரத்தை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரூ.4000 என்ற மலிவான விலையில் லேப்-டாப் கம்ப்யூட்டர்களை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான ஆராய்ச்சி பணிகள் பெங்களூரில் உள்ள இந்தியன் அறிவியல் கழகம் (ஐஐஎஸ்) மற்றும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்க கழகம் (ஐஐடி) ஆகியவற்றிலும் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த மலிவு விலை லேப்-டாப் கம்ப்யூட்டர் மாணவர்களின் படிப்பிற்கு பெரிதும் உதவும். தாமாகவே கல்வி கற்கும் திறனை வளர்க்கவும், இன்டர்நெட்டை பயன்படுத்தி புரிந்து கொண்டு படிப்பதற்கும் வழிவகை செய்யும்.
தொலை தொடர்பு தொழில்நுட்பம் கல்வியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்காலத்தில் பள்ளிகள் மற்றும் உயர்கல்விகளில் இந்த தொழில்நுட்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கல்விக்காக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இலவச அகண்ட அலைவரிசை வசதி கிடைக்கவும், மலிவான விலையில், எளிதில் தொழில்நுட்ப சாதனங்கள் கிடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் புரந்தரேஸ்வரி.