நாடாளுமன்றம்- குளிர்கால தொடர் ஒத்திவைப்பு?
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஒத்திவைக்கப் படக் கூடும் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. இந்த கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் சரத்பவார் ஆகியோர் கூட்டத்துக்கு வராததால் இதுகுறித்து முடிவு எடுக்க முடியவில்லை.
கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜ எம்பிக்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுப்பினர். கூட்டத் தொடரின்போது எதிர்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும். தற்போதுள்ள சூழலில் இதைத் தவிர்க்க கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் படக்கூடும்.
மேலும், பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைக் காரணம் காட்டி லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் நெருக்கடி தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளிர் கால கூட்டத் தொடரை இப்போது கூட்டுவது உசிதமாக இருக்காது என அரசு கருதுகிறது.
இதுதவிர சுதந்திர தின பாதுகாப்பு மற்றும் கூட்டத் தொடர் பாதுகாப்பை ஒரே நேரத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே ஆகஸ்ட் 11ம் தேதி நடக்க இருந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 15க்கு பிறகு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் கேட்டபோது, தீவிரவாதிகளின் தாக்குதல் ஒரு தேசிய துயரம் ஆகும். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க மாநில அரசுகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இருப்பதால் கூட்டத் தொடரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதேசமயம், எம்.பிக்களுக்கு லஞ்சம், தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றை கிளப்பி சபையை நடத்த விடாமல் தடுக்க பாஜக முயலும் என்பதால் அதற்கு இடம் கொடுக்க அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே குளிர்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications