காஞ்சிபுரம்: ஓரினச்சேர்க்கை-அமெரிக்கருக்கு 3 ஆண்டு சிறை
காஞ்சிபுரம்: வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளைஞர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட அமெரிக்க சுற்றுலா பயணிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நியூயார்க் அட்சன் பால்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மைல் பாட்ரிக் (47). சமூக சேவகர் என்று கூறிக்கொண்ட அவர், கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தார். மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். அப்பகுதி வாலிபர்களை அழைத்து மது அருந்தியும், செலவுக்கு பணம் கொடுத்தும் அவர்களை தனது பக்கம் திருப்பினார்.
பின்னர் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறிய பாட்ரிக், சில இளைஞர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு சீனிவாசன் (27) என்ற உள்ளூர்க்காரர் உதவி செய்துள்ளார்.
பாட்ரிக்கின் இயற்கைக்கு மாறான இந்த உறவுக்கு இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து மைல் பாட்ரிக், அவருக்கு உடந்தையாக இருந்த சீனிவாசன் ஆகியோர கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்தனர். இருவர் மீதும் திருக்கழுக்குன்றம் குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மாஜிஸ்திரேட்டு செம்மல் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில், பாட்ரிக், சீனிவாசன் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.