'ஹிட் லிஸ்ட்டில்' ராமகோபாலன்!
நெல்லை: தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும், இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன், நெல்லை மாவட்டத்தில் ஒரு டிஎஸ்பி ஆகியோரை கொல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் குண்டு வைக்க திட்டமிட்ட நெல்லையை சேர்ந்த அப்துல் காபூரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சென்னையில் கைது செய்யப்பட்ட மற்றொரு தீவிரவாதி ஹூராவை தனிப்படை போலீசார் நெல்லை அழைத்து வந்து விசாரித்தனர்.
இவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை, நெல்லையில் 2 கட்டமாக குண்டு வைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஜெயிலில் இருந்தபடியே சதிதிட்டத்தை உருவாக்கி வழி நடத்தியுள்ளார் அலி அப்துல்லா.
இந்த தாக்குதலுக்கு அப்துல் கபூருக்கு தளபதி பொறுப்பு வழங்கியுள்ளனர். கபூர் ஏற்கனவே இந்த இயக்கத்தில் இணைந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கற்றிருந்தார். இதனால் அவரை வைத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கட்ட தாக்குதல் நடத்த முடிவு செய்திருந்தனர்.
2 டைம்பாம் குண்டுகளைத் தயாரித்து சென்னைக்கு கொண்டு வரும்படி கபூருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அப்துல் காதரும், ஹீராவும் ஜாமீனில் வந்துள்ளனர். நேற்று அனைவரும் சென்னையில் சந்தித்து சதியை அரங்கேற்ற முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் போலீசார் இவர்களின் திட்டத்தை முறியடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை அண்ணா மேம்பாலம், சென்டரல் ரயில் நிலையம் ஆகியவற்றை முதல் கட்டமாக குண்டு வைத்து தகர்க்கவும், 2ம் கட்டமாக 15ம் தேதி சென்னையிலும், நெல்லையிலும் கலெக்டர் அலுவலகத்திலும் குண்டு வைக்க முடிவு செய்திருந்தனர்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் ஒரு டிஎஸ்பி ஆகியோரை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் பணம் கொடுத்தே காரியம் சாதிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இஸ்லாமியர்களை அங்குள்ள அதிகாரிகள் மதிப்பதில்லை என்பதால் நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும், நெல்லை மாநகராட்சியிலும் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள சென்னை புழல் சிறையில் இருக்கும் தீவிரவாதி அலி அப்துல்லாவை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications