ஆக. 6ல் மதுரை ரயில்வே மேம்பாலம் திறப்பு-கருணாநிதி பங்கேற்பு
மதுரை: மதுரையில் எல்லீஸ் நகர் புதிய ரயில்வே மேம்பாலத்தை ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
மதுரையில் எல்லீஸ் நகர் புதிய ரயில் மேம்பாலம் கட்டுப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே மிகவும் அகலமான ரயில்வே மேம்பாலமாகும்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருந்த எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு 5 வழிப்பாதைகளைக் கொண்ட புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செயய்ப்பட்டது.
அதன்படி இந்த பாலத்திற்கு 2000ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் இருப்புப்பாதை மின் மயமாக்கப்பட்டதால் இந்த பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில் ஒரு பகுதி ஏற்கனவே போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. இந்த பாலத்தின் பணிகள் தற்போது முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்த பாலத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி மதுரைக்கு வரும் போது ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி திறந்து வைப்பார் என்று திமுக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.