தீவிரவாதிகளுக்கு மதசார்பற்ற தலைவர்கள் ஆதரவு-பாஜக
சென்னை: மதசார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகள், தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பாஜக ஆளும் மாநிலங்களில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டனர். மதசார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகள், தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார்கள். இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீசாரை பாராட்டுகிறேன். பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் 1ம் தேதி தனுஷ்கோடி வருகிறார். ராமர் பாலத்தில் தனுஷ்கோடி யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் பாஜக சார்பில் ராமேஸ்வரத்தில் மீனவர் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்படுகிறது.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஆகியோர் இலங்கையில் அமைதி ஏற்பட ஒப்பந்தம் செய்தனர். அதை இலங்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
அது போல கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.