அணு ஒப்பந்தம்: எதிர்ப்பு நிலையிலிருந்து இறங்கியது பாக்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கிய வரைவு ஒப்பந்தத்தை சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் இந்தியா வழங்கியுள்ளது. இது ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தால் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி குலையும், அணு ஆயுதப் போட்டி உருவாகும் என்று எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அணு சக்தி ஏஜென்சிக்கு கடிதம் எழுதியது. மேலும், இதுதொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் உரிய விளக்கத்தை ஏஜென்சி அளிக்க வேண்டும் எனவும் அது கோரியது.
இதைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளுக்கு வரைவு ஒப்பந்தம் குறித்து ஏஜென்சி விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் தனது எதிர்ப்பு நிலையிலிருந்து பாகிஸ்தான் இறங்கி வந்துள்ளது. வரைவு ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளுடனும் இணைந்து ஆதரிக்க அது தீர்மானித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டத்தின்போது, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த கோர மாட்டோம் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. வரைவு ஒப்பந்தத்தை தடுக்கவோ அல்லது திருத்தம் செய்யுமாறு கோரவோ மாட்டோம் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான்தெரிவித்துள்ளதாக அணு சக்தி ஏஜென்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து நாளை நடைபெறவுள்ள சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒருமித்த ஆரவு கிட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தியா தனது கவனத்தை என்.எஸ்.ஜி எனப்படும் அணு பொருள் சப்ளை நாடுகள் அமைப்பின் பக்கம் திருப்பவுள்ளது. அவர்களிடம் விதி விலக்கு சலுகையை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. அது கிடைப்பதிலும் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21 முதல் 23ம் தேதி வரை வியன்னாவிலேயே என்.எஸ்.ஜி. கூட்டமும் நடைபெறவுள்ளது.
நாளை வியன்னாவில் கூடவுள்ள சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் 35 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தியாவின் வரைவு ஒப்பந்த்திற்கு இதில் ஒப்புதல் கிடைத்தால், கிட்டத்தட்ட 34 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சர்வதேச நாடுகளுடன் இந்தியா அணு வர்த்தகத்தில் ஈடுபட வழி பிறக்கும்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கூட்டத்தையொட்டி இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் வியன்னாவுக்கு வந்துள்ளார். உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அதேபோல, என்.எஸ்.ஜி. நாடுகளின் பிரதிநிதிகளுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். வரைவு ஒப்பந்தத்திற்கு இரு அமைப்புகளிடமிருந்தும் எந்தவித சிக்கலும் இல்லாமல் ஒப்புதல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த பேச்சுவார்த்தைகளில் ககோத்கர் ஈடுபட்டுள்ளார்.