தீவிரவாதியை தப்பவிட்ட உதவி கமிஷனர் மாற்றம்
நெல்லை: மதுரையில் தீவிரவாதியை கோட்டைவிட்ட உதவி கமிஷனர் தனிப்படை தலைமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நெல்லை பேட்டையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்துல் கபூர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 28ம் தேதி நெல்லை மாநகர உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படையினர் மதுரை சென்றனர்.
அங்கு பாண்டி கோயில் அருகே பூமியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினர். பின்னர் தனிப்படையினர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே இருவரை கைது செய்ய அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தபோது முஸ்தபா என்பவர் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
மதுரையில் அவரை பிடித்திருந்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய நபரை போலீசார் கோட்டை விட்டு விட்டதால் தனிப்படைக்கு தலைமை வகித்த உதவி கமிஷனர் ஞானசேகரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டவுன் இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் தனிப்படைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.