காதலியை சந்திக்க வெடிகுண்டு புரளி கிளப்பியவர் கைது
சென்னை: காதலியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அரசுக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி கிளப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மின்ட் பகுதியில் உள்ள அரசு பாரதி மகளிர் கல்லூரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று கல்லூரி முழுக்க தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அத்தகவல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இருப்பினும் மாணவிகள் பீதியில் இருந்ததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள இன்னொரு கல்லூரி மற்றும் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
போலீஸார் மற்றும் மாணவ, மாணவியரை தேவையில்லாமல் அலைக்கழித்த வதந்தி பரப்பிய நபரைப் பிடிக்க போலஸீார் வேட்டையை முடுக்கி விட்டனர்.
விசாரணையில் மர்ம வாலிபர் பேசிய செல்போன் நம்பர் கிடைத்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர், அந்த நம்பர் குறித்து செல்போன் நிறுவனத்தில் விசாரித்தனர்.
இதில் அந்த எண்ணுக்குரியவர் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி மாத்தூரை சேர்ந்த நாகர்ஜுனா (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து நாகார்ஜூனாவை மூலக்கடையில் வைத்து போலீஸார் மடக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் வெடிகுண்டு புரளியைக் கிளப்பியது எனத் தெரிய வந்தது.
போலீஸாரிடம் நாகார்ஜூனா கூறுகையில், நான் அண்ணாநகர் ஆர்ச் அருகே உள்ள செல்போன் கடையில் வேலை பார்க்கிறேன். பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியை கடந்த 2 மாதமாக காதலித்து வந்தேன். அந்த பெண் வியாசர்பாடியை சேர்ந்தவர். நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து எங்கள் காதலை வளர்த்து வந்தோம்.
கடந்த இரண்டு நாளாக என்னிடம் அவள் சரியாக பேசவில்லை. இதற்கு காரணம் கேட்பதற்காக காலையில் பள்ளிக்கு அருகே வந்து காத்திருந்தேன். ஆனால், பள்ளிக்கு வந்த அவள் என்னை பார்க்காமல், உள்ளே சென்றுவிட்டாள்.
இதனால், அவளை வெளியே வரவைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன். அருகில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்க போவதாக கூறினால், உடனே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால், போலீசுக்கு போன் செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வதந்தி பரப்பிய அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications