காங்கிரஸார் மெத்தனமாக இருக்கக் கூடாது: சோனியா
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விட்டோம் என்று மெத்தனமாக இருந்து விடாமல் காங்கிரஸார் தொடர்ந்து சோர்வின்றி, தொய்வின்றி செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான காங்கிரஸ் சந்தேஷில், காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விலைவாசியைக் குறைப்பதிலும், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு செயல்படுகிறது.
ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நாம் வெற்றி பெற்று விட்டோம். இருப்பினும் அதற்காக மெத்தனமாக இருந்து விடாமல் தொடர்ந்து தொய்வின்றி, சோர்வின்றி காங்கிரஸார் உழைக்க வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தம் திட்டமிட்டபடி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து பண வீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் குறைக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனி கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார்.
எதிர்பாராத எண்ணை விலை உயர்வு, பிற அத்தியாவசியப் பொருட்களின் உலகளாவிய விலை உயர்வு ஆகியவை நமது நாட்டில் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகி விட்டன.
இருப்பினும் நாட்டின் விவசாய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் எந்தவித குறையும் இல்லை என்பது இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் வருகின்றன. இதற்கு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தயாராக வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற சந்தோஷமும், தெம்பும் நம்மிடம் இருந்தாலும், அதை மனதில் கொண்டு மெத்தனமாக இருந்து விடக் கூடாது. நாம் போக வேண்டிய பாதை இன்னும் உள்ளது. சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதை அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து சந்தித்து சமாளித்து வெற்றி பெற வேண்டும்.
கட்சியின் அனைத்து மட்டத்திலும் ஒற்றுமை, கட்டுப்பாடு, சோர்வின்றி உழைக்கும் தன்மை இருக்க வேண்டும் என கூறியுள்ளார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications