அரசு மரியாதையுடன் சுர்ஜித் உடல் இன்று தகனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவரது உடல் தகனம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லி நிகம்போத் மயானத்தில் நடைபெறுகிறது.
முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை டெல்லி திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து அவர் நேரே மயானத்திற்கு வரக் கூடும் எனத் தெரிகிறது.
இன்று காலை முதல் சுர்ஜித்தின் உடல் சிபிஎம் தலைமையகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
சுர்ஜித்தின் உடலுக்கு அருகே பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, எஸ்.ஆர். பிள்ளை, பிருந்தா காரத் உள்ளிட்டோர் சோகத்துடன் நின்றிருந்தனர்.
சுர்ஜித்தின் மனைவி பிரீத்தம் கெளர், அவரது இரு மகன்களான குருசேத்தன், பரம்ஜீத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
முன்னாள் பிரதமர்கள் தேவெ கெளடா, ஐ.கே.குஜ்ரால், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், வயலார் ரவி, எம்.எஸ்.கில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வி.கே.மல்ஹோத்ரா, சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அமர்சிங், அகாலிதள தலைவர் எஸ்.எஸ்.பாதல், இடதுசாரி தலைவர்கள் ராஜா, அபான் ராய், தெலுங்கானா ராஷ்டிரிய சமித தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
சீனா, கியூபா, ஈரான், வியட்நாம், வட கொரியா, நேபாளத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளும் வந்திருந்து சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோரது சார்பில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டன.
இறுதிச் சடங்கில், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி, மூத்த தலைவர் ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications