பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு உதவி-முதல்வர்
சென்னை: பெற்றோரை இழந்து கடலூர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற 5 குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர்
கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிதம்பரம் வட்டம் கீழ்அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திலகவதி என்பவர் தீ விபத்தில் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த அவரது
கணவர் பன்னீர்செல்வம் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்த அறிந்த முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த வருத்தமும், வேதனையும் அடைந்தார். அவர்களின் மறைவால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர்களின் குழந்தைகள் கவிதா (10), கவியரசன் (7), கவியரசி (5), கலைச்செல்வி (2), கனிமொழி (கைக்குழந்தை) கடலூரில் உள்ள காப்பகத்தில் உள்ளனர்.
அவர்களின் எதிர்கால நலனைக் கருதி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு லட்ச ரூபாய் வீதம் மொத்தம் ஐந்து லட்ச ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை வங்கியில் வைப்பீடாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டித்தொகையில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழந்தைகளின் அத்தியாவசியச் செலவுகளுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும்.
மீதமுள்ள தொகையை குழந்தைகளின் கணக்கில் வைத்திருந்து அவர்கள் 21 வயது நிறைவடையும்பொழுது மொத்தத் தொகையையும் அவர்களிடமே வழங்கலாம் என்றும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications