தீவிரவாதி தவ்பீக் சுற்றி வளைப்பு?
நெல்லை: தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி தவ்பீக்கை போலீசார் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 11ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் பல நகரங்களில் ஒரே சமயத்தில் வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா, அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 11ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் தனித்தனி அறைகளில் அவர்களை அடைத்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் சதித்திட்டத்துக்கு மூலகர்த்தாவாக செயல்பட்டது இறைவன் ஒருவனே' அமைப்பு தலைவன் தவ்பீக் என்பது தெரிய வந்தது.
தவ்பீக்கின் தலைமையில் 30 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் தலைமறைவாக உள்ளனர். வருகிற ஆகஸ்டு 15ம் தேதி பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், எங்களை கைது செய்தாலும் திட்டமிட்டபடி வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என்று தீவிரவாதி அலி அப்துல்லா கூறியுள்ளார்.
தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் ஹீரா சொன்னபடியே செயல்பட்டு வந்ததாக தீவிரவாதி அப்துல் கபூர் கூறியுள்ளார். எங்கள் இயக்கத்தில் மொத்தம் 30 பேர் இருக்கிறோம். எல்லா விஷயங்களும் தவ்பீக்கிற்குத்தான் முழுமையாக தெரியும். தவ்பீக் இப்போது கேரளாவில் இருக்கிறார் என்று ஹீரா கூறியுள்ளார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு கேரளா சென்றனர். திருவனந்தபுரத்தில் இரவு, பகலாக ரகசிய தேடுதல் வேட்டை நடத்தினர். கேரள போலீசாரின் உதவியுடன் அங்குள்ள பள்ளிவாசல்கள் லாட்ஜ்கள் ஆகியவற்றை கண்காணித்தனர்.
முன்னதாக தீவிரவாதிகள் 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் அனைத்தையும் போலீசார் சேகரித்தனர். ஒவ்வொரு எண்களுக்கும் தீவிரவாதிகளை வைத்தே தொடர்பு கொள்ளச் செய்தனர்.
செல்போன்கள் மூலம் அவர்கள் நூற்றுக்கணக்கான பேரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் தவ்பீக் மற்றும் அவனது கூட்டாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் தெரிந்து கொண்டனர்.
அப்துல் கபூர் கொடுத்த ஒரு முக்கிய தீவிரவாதியின் செல்போன் எண் மூலமாக மிக நூதனமாக தவ்பீக் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்ததாகவும், தவ்பீக்கை நெல்லை போலீசார் சுற்றி வளைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
வருகிற 11ம் தேதி 3 தீவிரவாதிகளை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது தவ்பீக்கையும் சேர்த்து ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து நெல்லை மாநகர கமிஷனர் மஞ்சுநாதா கூறுகையில், திருவனந்தபுரத்தில் நடந்த சோதனை பற்றி நான் எதுவும் கூற முடியாது. வழக்கு விசாரணைக்கு வரும்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications