தங்கபாலுவுக்கு எதிர்ப்பு-மீண்டும் ஏற்றப்பட்ட தமாகா கொடி!
சேலம்: தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலுவை நியமிக்கப்பட்டதற்கு கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் அருகே வாசன் ஆதரவாளர்கள் த.மா.கா. கொடியை ஏற்றி தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக எம்பி தங்கபாலு நியமிக்கப்பட்டார். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
தங்கபாலுவின் தொகுதியான சேலத்திலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கு வாசன் ஆதரவாளர்கள் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஓமலூரில் த.மா.கா. கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந் நிலையில் நேற்று சேலத்துக்கு வந்த தங்கபாலுவுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பாளர்கள், ஓமலூர் அருகே தங்கபாலுவுக்கு கறுப்பு கொடி காட்ட அக் கட்சியினர் சிலர் திட்டமிட்டிருந்தனர்.
இதனால் ஓமலூர் வழியாக தர்மபுரி செல்ல வேண்டிய தங்கபாலு அதைத் தவிர்த்துவிட்டு பைபாஸ் சாலை வழியாக தர்மபுரி சென்றார்.
இதற்கிடையே நேற்று மதியம் சேலம் அருகே உள்ள மல்லூரில் காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலுவை எதிர்த்து த.மா.கா. கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பாளர் சரவணன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தங்கபாலுவை ஏற்க முடியாது. சேலம் பாராளுமன்ற தொகுதிக்கே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எந்த திட்டமும் வரவில்லை. அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு வளர்ச்சி அடையும். எனவே அவரை காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்து நீக்க வேண்டும்.
அவரை தலைவராக நியமித்த கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications