தொடர் போராட்டம் எதிரொலி: குசேலன் தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு
சென்னை: ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்து வருவதால் குசேலன் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்த் பேசியது தமிழகத்தில் லசலப்பை ஏற்படுத்தியது. சில நடிகர்களும், பாமகவும், சில அமைப்புகளும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குசேலன் படத்திற்கு எதிராக போராட்டங்களும் தொடங்கியுள்ளன. சென்னையில் நேற்று திராவிட பறையர் பேரவை சார்பில் ஐநாக்ஸ் மற்றும் தியாகராஜா தியேட்டர்கள்முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல சேலத்தில்,குசேலன் ஓடும் ராஜேஸ்வரி, கீதாலயா, ராஜசபரி ஆகிய தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து சென்னையில் குசேலன் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குசேலன் ஓடும் திரையரங்குகளுக்கு முன்பு போராட்டம் நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி வீடு முற்றுகை - காங்.
இதற்கிடையே, தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து அவரது படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பும், அவரது வீட்டின் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இளைஞர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூவை. ஜேம்ஸ் தலைமையில் ஆவடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக தான் ஏற்கனவே பேசிய பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கன்னடர் களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினி, அதனை திரும்பப் பெறாவிட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் ரஜினி படம் ஓடும் தியேட்டர்களின் முன்பும், அவரது வீட்டின் முன்பும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications