தீவிரவாத்த்துக்கும் ஐஎஸ்ஐக்கும் தொடர்பில்லை-முஷாரப்
கராச்சி: ஐஎஸ்ஐதான் பாகிஸ்தானின் முக்கிய பாதுகாப்பு அரண் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு உதவுவதாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுப் பட்டியிலில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் வாஷிஙடனுக்குச் சென்றிருந்தபோது, இதுகுறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் அதிபர் புஷ்.
இனியும் பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்துகொள்ள முடியாது, என அவர் கூறிவிட்டார்.
தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.
கராச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் முக்கிய பாதுகாப்பு அரணே ஐஎஸ்ஐதான்.
இந்த அமைப்பைக் குற்றம்சாட்டுவது நாட்டையே பலவீனப்படுத்துவதற்குச் சமம்.
தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் ஐஎஸ்ஐயும் போராடி வருகிறது. ஐஎஸ்ஐ மீது நடவடிக்கை எடுத்தால் நாட்டின பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும். ஐஎஸ்ஐ நாட்டுப்பற்று கொண்ட பாதுகாப்பு அமைப்பு. நாட்டின் ஸ்திரதன்மையையும் ஐஎஸ்ஐதான் பாதுகாத்து வருகிறது. இது நாட்டின் கவுரவம்.
பாகிஸ்தான் பயங்கரவாத நாடல்ல!
பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் நாடு என்று இந்த உலகம் சொல்கிறது. ஆனால் அது உண்மையல்ல என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம்.
நடுநிலையான, சுதந்திரமான பாகிஸ்தான் வேண்டுமா, பயங்கரவாத மற்றும் தீவிரவாதிகளின் பாகிஸ்தான் வேண்டுமா என்பதை நாம் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அபாயகரமாக உள்ளது. பொருளார நிலை மிகவும் நலிந்துள்ளது. இதுபோன்ற பொருளாதார நிலையில் பாகிஸ்தானை வாழ்விப்பது மிகவும் கடினம் என்று கூறினார்.
உளவுத்துறையை உள்துறையின் கீழ் கொண்டு வரப்போவதாக பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதை திரும்ப பெற வேண்டும் என்று முஷாரப்பும் ஆயுதப்படையும் அரசை நிர்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications