ஓட்டுக்கு நோட்டு-சக்ஸேனாவை விசாரிக்க முடிவு
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜக எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, அது தொடர்பாக கிடைத்துள்ள வீடியோவை விசாரணை குழு பார்த்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி தங்களுக்கு ரூ.1 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக அவற்றை காட்டி லோக்சபாவில் பாஜக எம்பிக்கள் 3 பேர் புகார் கூறினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி 7 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை அமைத்தார்.
காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திரதேவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் வி.கே.மல்கோத்ரா (பாஜக), முகமது சலீம் (சிபிஎம்), ராம்கோபால் யாதவ் (சமாஜ் வாடி) தேவேந்திர பிரசாத் யாதவ் (ராஷ்டீரிய ஜனதா தளம்), ராஜேஷ் சர்மா (பகுஜன் சமாஜ்), குப்புசாமி (திமுக) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள ரகசிய வீடியோ சபாநாயகர் சோம்நாத்திடம் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விசாரணை குழுவினர் பார்த்தனர்.
சஞ்சீவ் சக்ஸேனா என்பவர் பணத்தை எடுத்து வெளியே வைப்பது அதில் பதிவாகியுள்ளது. ஆனால், அதில் பதிவாகியுள்ள பேச்சு தெளிவில்லாமல் உள்ளதாம்.
எனவே பேச்சு பகுதியை முழுமையாக டைப் செய்து தருமாறு நாடாளுமன்ற செயலகத்துக்கு விசாரணைக் குழு உத்தரவிட்டது.
அடுத்த கட்ட விசாரணை 7ம் தேதி நடக்க உள்ளது. அப்போது எம்பிக்களுக்கு நேரில் பணத்தை கொடுத்த சஞ்சீவ் சக்சேனாவிடம் விசாரணை நடத்த குழு தி்ட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோவை படம் எடுத்தவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications