வாக்காளர் பட்டியல்-அலட்சிய ஊழியர்கள், குப்தா எச்சரிக்கை
சென்னை: வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சட்டசபை தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின்போது, முகாம்கள் சரியாக செயல்படவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.
ஒரு மையத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர் (ஆசிரியர்) வீடு வீடாகச் சென்று அந்த குடும்பங்களில் விடுபட்டவர்களிடம் படிவங்களைக் கொடுத்து அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் படிவங்களைக் கொடுத்துள்ளார். இதற்காக அந்த அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு மையத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர் (ஆசிரியர்), அங்கிருப்பவர் மூத்த அதிகாரி என்பது தெரியாமல் அவரிடமே, வீடு வீடாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பட்டியலை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டியது அவசியம். அவ்வாறு செல்லும்போது, பட்டியலில் பெயர் உள்ளவர்களிடம் அவர்களது பெயர்கள் அடங்கிய துண்டுச் சீட்டை கொடுத்துவிட்டு வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஒட்டியாக வேண்டும்.
பெயர்கள் விடுபட்டிருந்தால், 6ம் எண் படிவத்தை கொடுத்து பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு, வீடு வீடாக சரிபார்ப்பதற்கு ஆகஸ்ட் 18ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த அவகாசம் மேலும் 7 முதல் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியில் ஏதாவது சுணக்கமோ, குறைபாடுகளோ காணப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கப்படுமென வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து அதிகாரிகளும் எச்சரிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார் குப்தா.












Click it and Unblock the Notifications