கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி
கோவை: கோவையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்திக்க வந்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியை பல்கலைக்கழமாக்குவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்தது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு வந்து அமைச்சரை சந்தித்து தங்களது கருத்து தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் போலீஸார் அவர்களை அனுமதிக்க மறுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அங்கு கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் அங்கு வந்தனர். அமைச்சரை சந்திக்க வேண்டும் என அவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களை போலீஸார் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்தனர்.
ஆனால் அதை மீறி உள்ளே நுழைய மாணவர்கள் முயன்றதால், போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். பல மாணவர்களை குண்டுக்கட்டாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அமைச்சர் பொன்முடி இருந்த அறைக்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.