திமுகவுடன் உறவு மறுபரிசீலனை-இடதுசாரிகள்
புதுக்கோட்டை&கொடைக்கானல்: காங்கிரஸ் உடன் திமுக உறவு தொடரும் பட்சத்தில் திமுகவுடன் உள்ள கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில கூட்டம் 2 நாட்கள் நடந்தது.
இதில் தமிழக மக்களின் பிரச்சனைகள், வாழ்வாதாரம், மற்றும் மத்திய அரசின் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் கல்வி கொள்கைகளால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
செல்வந்தர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டனர். அரசின் அலட்சியத்தால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கலந்து பேசி மக்கள் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உடன் உள்ள உறவை திமுக துண்டிக்க வேண்டும். இல்லையெனில் திமுகவுடன் உள்ள உறவு குறித்து மறு பரிசீலிக்கப்படும்.
காங்-பாஜக இல்லாத கூட்டணியுடன் கூட்டு-சிபிஐ:
இந் நிலையில் தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக இல்லாத கூட்டணியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கும் என அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத, திட்டவட்டமான கொள்கைகள் கொண்ட அணியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவுள்ளோம்.
பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளுக்குமே வரும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது. மாயாவதி-இடதுசாரி கட்சிகளுடன் முறையாக கூட்டணி அமைக்கும் அணிக்கே வெற்றி கிடைக்கும்.
தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக எந்த கட்சிகளுடன் வைக்கிறதோ அதைப்பொறுத்து எங்களுடைய கூட்டணி அமையும். தற்போது தமிழகத்தில் கூலிப்படை, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு சட்ட விரோத செயல்கள் 'நல்லபடியாக' நடந்து வருகின்றன.
இது குறித்து முதல்வர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்களே எடுக்க தயாராக உள்ளோம்.
வட மாநிலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தாக்கப்படுவதால், தற்போது நாங்கள் எங்களுடைய தொண்டர்கள் பாதுகாப்பிற்காக கத்தி, கம்புகளை வைத்துக் கொண்டு்ள்ளோம்.
சென்னையில் தொடரும் மர்மக் கொலைகள் போலீசாரின் 'சிறப்பான' செயல்பாட்டினையே காண்பிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications