சான்றிதழுக்கு ரூ.500 லஞ்சம்-விஏஓ கைது!
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே சான்றிதழ் தர ரூ. 500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது மகிபாலன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தொழில் தொடங்க கடன் கேட்டார். அதற்கு வங்கி அதிகாரிகள் சில சான்றிதழ்களைக் கேட்டனர்.
தேவையான சான்றிதழ் கேட்டு எஸ். வேலாங்குடி கிராம நிர்வாக அதிகாரி காந்தியை அனுகினார். அப்போது சான்றிதழ் கொடுப்பதற்காக செந்தில் குமாரிடம் காந்தி ரூ 500 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
பின்னர் அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயண மை தடவிய ரூ 500 பணத்தை கிராம நிர்வாக அதிகாரி காந்தியிடம் கொடுத்தார். அப்போது அவரது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் டி.எஸ்.பி குமாரசாமி, இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா மற்றும் ஏட்டுகள் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி காந்தியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications