நாடாளுமன்றத்தை கலைப்பாரா முஷாரப்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் தூக்கி எறியப்படுவது நிச்சயமாகி விட்டது. வருகிற 11ம் தேதி அவரைப் பதவியிலிருந்து அகற்ற, பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வர ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் தீர்மானித்துள்ளன.
நவாஸ் ஷெரீப், ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் இணைந்து முஷாரப்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெனரல் முஷாரப்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளோம். இது ஜனநாயகத்திற்கு அவசியமானது. விரைவில் இதுதொடர்பான நடவடிக்கைள் தொடங்கப்படவுள்ளது என்றனர்.
முஷாரப்பை நீக்கும் அதே நேரத்தில் அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரையும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கவும் ஷெரீப் - சர்தாரி கூட்டணி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் நெருக்கடியால் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த முஷாரப் தனது சீன பயணத்தை மீண்டும் ரத்து செய்து விட்டதோடு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்க அவர் முடிவெடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அல்லது அவசர நிலையை பிரகடனப்படுத்தி இடைக்கால அரசை அவர் நியமிக்கலாம் என்றும் தெரிகிறது.
முன்னதாக இது குறித்து ஷெரீப்பும், சர்தாரியும் மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த எட்டு ஆண்டுகளில் முஷாரப் நாட்டை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்று விட்டார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறி விட்டார்.
அவருடைய கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டன. பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய மின்சார நெருக்கடியையும் நாடு சந்தித்துள்ளது. அவருடைய ஆட்சியாலும், நிர்வாக திறமையின்மையாலும் நாடு சீர்குலைந்து போய் விட்டது. நாட்டின் நலன்களை அவர் புறக்கணித்து விட்டார் என்றனர்.