புயல் சின்னம்: ஆந்திராவில் கன மழை - 16 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். பல கிராமங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.
வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மேற்கு மத்திய கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆந்திராவில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் ஆந்திராவின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் ஹைதராபாத்தில் 7 பேரும், மேடக் மாவட்டத்தில் 3 பேரும், விஜயவாடா, நல்கொண்டா, ரங்காரெட்டி மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்தனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் உயிர்ப் பலி உயரும் என அஞ்சப்படுகிறது.
சுவர்கள் இடிந்து விழுந்துதான் பலர் பலியாகியுள்ளனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் தகவல் தொடர்பு, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை நீர் வடியாததால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும்...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர்தேங்கிக் கிடக்கிறது. பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications