ஒலிம்பிக்கை எதிர்த்து இந்தியாவில் திபெத்தியர்கள் போராட்டம்

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. அதே நேரத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவைக் கண்டித்து ஆவேசமாக கூச்சலிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தூதரகத்திற்குள்ளும் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை கடுமையாக போராடி தடுத்து பின்னர் கைது செய்தனர். மொத்தம் 110 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின்போது திபெத்தியர்கள் சிலர் காயமடைந்தனர். சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து சீன தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஜட்டியுடன் போராட்டம்
இதேபோல சென்னையில் திபெத்திய மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து இவர்கள் சென்னைக்கு போராட்டம் நடத்த வந்திருந்தனர்.
அண்ணா மேம்பாலத்தில் ஜட்டியுடன் இவர்கள் நேற்று மாலை ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவை எதிர்த்து கோஷமிட்டபடியும், திபெத்திற்கு விடுதலை அளிக்கும் வரை சீனாவில் ஒலிம்பிக் போட்டி நடத்தக் கூடாது என்ற பதாகைகளையும் ஏந்தியபடி வந்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஜட்டியுடன் வந்த மாணவர்களை தடுத்துக் கைது செய்தனர். பின்னர் இரவில் அவர்கள் அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications