பேச்சுவார்த்தை தோல்வி - ஜம்முவில் தொடர்ந்து போராட்டம், பதட்டம்
ஜம்மு: உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான மத்திய குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் ஜம்முவில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பதட்டமும் நீடிக்கிறது.
அமர்நாத் தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து அங்கு ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ சமிதி அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக ஜம்முவில் கலவரம், வன்முறை, துப்பாக்கிச் சூடு என அமளியாக உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலைமையை சுமூகமாக்கும் வகையில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் அனைத்துக்கட்சியினரும் அடங்கிய மத்திய குழு நேற்று ஜம்மு வந்தது. ஆனால் இக்குழுவில் உள்ள பரூக் அப்துல்லா, மஹபூபா முப்தி, சைபுதீன் ஜோஸ் ஆகியோரை நீக்கினால்தான் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என அமர்நாத் சங்கர்ஷ சமிதி அறிவித்து விட்டது.
இதையடுத்து இந்த மூன்று பேரையும் நீக்கிய மத்திய குழு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு சமிதிக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து சமிதி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சமிதி செய்தித் தொடர்பாளர் லீலா கரன் சர்மா, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எங்களது போராட்டம் தொடரும். மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளைத்தான் பேச்சுவார்த்தையின்போது முன்வைத்தோம். புதிய கோரிக்கைகளை நாங்கள் வைக்கவில்லை என்றார்.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் ஜம்முவில் போராட்டம் தொடருகிறது. பல பகுதிகள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளன. ராணுவம் தொடர்ந்து ரோந்து சுற்றிவருகிறது.
சதம்பா, கதுவா, உதம்பூர், ஜம்மு மாவட்டங்களில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளை மீறி பேரணிகள் நடத்தப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
ஆளுநர் வோரை, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மஹபூபா முப்தி ஆகியோரின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications