மோனிகா தேவி மீதான குற்றச்சாட்டு வாபஸ்: 'சாய்' பலே பல்டி!
டெல்லி: பளு தூக்கும் வீராங்கனை மோனிகா தேவி மீது சுமத்திய ஊக்க மருந்து புகாரை திரும்பப் பெறுவதாக இந்திய விளையாட்டு ஆணையகம் திடீரென அறிவித்துள்ளது. இருப்பினும் பெய்ஜிங் போகும் கால அவகாசம் முடிந்து விட்டதால் மோனிகாவால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க ஷைலஜா பூஜாரி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதில் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாக அவரை விட சிறந்த வீராங்கனையாக கருதப்படும் மோனிகா தேவி குற்றம் சாட்டினார். இதையடுத்து ஷைலஜா பூஜாரி நீக்கப்பட்டு மோனிகா சேர்க்கப்பட்டார்.
ஆனால் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் மோனிகா தேவி ஊக்க மருந்து உட்கொண்டதாக கூறியது இந்திய விளையாட்டு ஆணையகம். இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டார் மோனிகா தேவி.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிகா தேவி, விளையாட்டு ஆணையகத்திற்குச் சென்று அங்கு செயல் இயக்குநரிடம் கடும் வாதம் புரிந்தார். தன் மீது குற்றம் இருந்தால் பொது இடத்தில் நிற்க வைத்து சுடுங்கள் என்றும் ஆவேசமாக பேட்டியளித்தார்.
இந்த நிலையில் இன்னொரு திருப்பமாக மோனிகா தேவி மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டை திரும்பப் பெறுவதாக இந்திய விளையாட்டு ஆணையகம் திடீரென அறிவித்துள்ளது.
இதுகுறித்து மணிப்பூர் விளையாட்டு அமைச்சர் பிரன் சிங் கூறுகையில், மோனிகா மீதான குற்றச்சாட்டுக்களை இந்திய விளையாட்டு ஆணையகம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் உரிய காலத்தில் அவர் பெய்ஜிங் போகாததால், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளமுடியாத நிலைக்கு மோனிகா தேவி தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை பெய்ஜிங் அனுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
மோனிகா தேவி விவகாரம் வெடித்தவுடனேயே மணிப்பூர் அரசு இதில் தலையிட்டது. மணிப்பூர் முதல்வர் இபோபி, பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்பு கொண்டு முறையிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
மோனிகா தேவி 69 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் கடைசி நேர குழப்பத்தால் அவர் பங்கேற்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், இந்தியாவின் சார்பிலும் யாரும் பங்கேற்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
ஏன் முதலில் மோனிகா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் எப்படி அவரை நிரபராதி என அறிவித்தனர் என்பதற்கான காரணத்தை இந்திய விளையாட்டு ஆணையகம் இதுவரை வெளியிடவில்லை.
ஒலிம்பிக்கில் இந்தியா 'பித்தளை' பதக்கம் கூட வாங்க முடியாமல் பரிதவிப்பதன் காரணம் இப்போது புரிகிறதா?












Click it and Unblock the Notifications