ஆதரவை நிரூபிக்க ரங்கசாமிக்கு மேலிடம் கெடு
புதுச்சேரி: தனக்குள்ள எம்.எல்.ஏக்கள் ஆதரவை வருகிற13ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரங்கசாமிக்கு எதிராக நீண்ட காலமாகவே அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது அவரது அமைச்சரவையில் உள்ள வைத்தியலிங்கம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வல்சராஜ் ஆகிய 5 அமைச்சர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாகவும், ஆக்கப்பூர்வமாக ஒரு வேலையும் நடக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதிருப்தி கோஷ்டியினர் டெல்லியிலேயே முகாமிட்டு தொடர்ந்து மேலிடத்தை வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், மக்கள் மத்தியிலும், வன்னிய சமுதாயத்தினர் மத்தியிலும் செல்வாக்குடன் திகழும் ரங்கசாமியை தடாலடியாக மாற்றினால் தேர்தல் சமயத்தில் அது பாதகமாகி விடும், காத்திருக்கும் பாமகவுக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதால் கட்சி மேலிடம் நிதானம் காத்து வருகிறது.
இருப்பினும் நாளுக்கு நாள் ரங்கசாமிக்கு எதிரான அதிருப்தியும், ெநருக்குதலும் அதிகரித்து வருவதால், ரங்கசாமியை டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைத்தது.
இதையடுத்து ரங்கசாமி டெல்லிக்குச் சென்றார். ஆனால் சோனியா காந்தி ஒலிம்பிக் தொடக்க விழாவுக்குப் போய் விட்டதால் அவரை சந்திக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று அவர் புதுச்சேரி திரும்பினார்.
இந்த நிலையில், வருகிற 13ம் தேதிக்குள் தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலை தருமாறு கட்சி மேலிடம் ரங்கசாமியை கேட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அதிகாரபூர்வமற்ற வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறது காங்கிரஸ் மேலிடம்.
புதுச்சேரி சட்டசபையில் மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் அதுதான் தனிப் ெபரும் கட்சியாகும். இவர்களில் ரங்கசாமியையும் சேர்த்து 6 பேர் அமைச்சர்கள். அதில் 5 பேர் எதிராக உள்ளனர். மற்ற 5 பேரின் ஆதரவையும் தற்போது ரங்கசாமி பெற்றாக வேண்டும். அப்போதுதான் மெஜாரிட்டி காட்ட முடியும். இவர்களில் ஒருவரான நமச்சிவாயம் ரங்கசாமியின் உறவினர் என்பதால் அவரால் எந்த சிக்கலும் இல்லை.
எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்று ரங்கசாமி தப்புவாரா அல்லது முதல்வர் பதவியை இழப்பாரா என்பதை புதுச்சேரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications