5 வது தலைமுறையும் அழியாமல் காக்க பூரண மது விலக்கு தேவை: ராமதாஸ்
சென்னை: ஏற்கனவே 4 தலைமுறை வீணாக போய்விட்டது. 5வது தலைமுறையும் ஆபத்தில் உள்ளது. இந்த தலைமுறையாவது மானத்தோடு, வீரத்தோடு கல்வி பெற்று நல்ல சமுதாயமாக திகழ திட்டம் தீட்டுங்கள். பூரண மது விலக்கை கொண்டு வாருங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. எம்எல்ஏ சக்தி கமலம்மாள் தலைமை வகித்தார்.
இதில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், மதுவால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த, தந்தையை இழந்த, பிள்ளைகளை இழந்தவர்கள் தாங்கள் அனுபவித்த அனுபவித்து வரும் துன்பங்களை இங்கே சொல்லி கதறி அழுததைத்தான் இந்த மாநாட்டின் வெற்றி என்று சொல்ல வேண்டும். மதுவை ஒழிக்கப் போவது இந்த மகளிர் சக்திதான்.
நான் ஒரு டாக்டர். குடிபழக்கத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து 2 மணிநேரம் கூட என்னால் பேச முடியும். அதில் அவ்வளவு பிரச்சனைகள் உள்ளன. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள மாடப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள 500 குடும்பங்களில் 180 இளம் விதவைகள் உள்ளனர்.
தமிழகம் முன்பு செல்வ செழிப்பாக இருந்தது. இன்று தமிழகத்தின் நிலைமை வேறு விதமாக உள்ளது. தமிழகத்தில்தான் அதிக இளம் விதவைகள் உள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளி விவரம் சொல்கிறது. இது பெருமையா? இதை மாற்றியாக வேண்டும்.
மதுவினால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். 4 தலைமுறை வீணாக போய்விட்டது. 5வது தலைமுறையும் ஆபத்தில் உள்ளது. இந்த தலைமுறையாவது மானத்தோடு, வீரத்தோடு கல்வி பெற்று நல்ல சமுதாயமாக திகழ திட்டம் தீட்டுங்கள்.
ஆகஸ்ட் 15ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் மதுவை ஒழிக்க தீர்மானம் கொண்டு வரும்படி பாமக மகளிர் வலியுறுத்துவார்கள். அதற்கான தீர்மானம் இங்கே போடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அந்த கூட்டத்தில் மது ஒழிப்பு தீர்மானத்தை கொண்டு வரச் சொல்லி நீங்கள் உத்தரவிட வேண்டும்.
ஒரே நாளில் மது விலக்கை கொணடு வர முடியாது என்றால் அதை படிப்படியாக செய்யுங்கள். ராமதாஸ் சொன்னான் என்பதற்காக அல்ல. பெண்களும் குடிப்பழக்கம் இல்லாத ஆண்களும் மதுக்கடையை மூட ஆர்வமாக உள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications