வாக்கு சேகரிப்பு?-விவசாயிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!
லோக்சபா தேர்தலில் விவசாயக் கடன்தள்ளுபடியை முக்கிய பிரசாரமாக வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதையே இது காட்டுகிறது.
இதுகுறித்து லக்னோவில் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதை விளக்கி, விவசாயிகளின் ஆதரவை கோரும் வகையில் அனைத்து விவசாய பயனாளிகளுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதங்களை காங்கிரஸார் ஒவ்வொரு விவசாயிடமும் நேரடியாக கொண்டு சேர்ப்பார்கள் என்றார்.
விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை விவசாயிகளிடம் நேரடியாக தெரிவித்து அவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கமே இந்த கடிதம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை முறியடிக்க முடியும் எனவும் காங்கிரஸ் நம்புகிறது.
இதுதவிர விவசாயிகளுக்காக செய்யப்பட்டுள்ள நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் தனது கடிதத்தில் விளக்கியுள்ளாராம்.
இதை விட அதிரடியாக உ.பி. மாநிலத்தில் ஒரு திட்டத்தை காங்கிரஸ் கையில் வைத்துள்ளது. அதாவது விவசாயக் கடன் தள்ளுபடியால் பலனடைந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு அல்லது 3 பேரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் திட்டம்தான் அது.
உ.பியில் சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்த்துள்ள காங்கிரஸ், விவசாயிகளை காங்கிரஸ் பக்கம் ஈர்த்தால் பெருவாரியான வாக்குகளை அள்ள முடியும் என கணக்கிட்டுள்ளது.