காரைக்குடி: தானம் செய்த கண்களை பெற டாக்டர்கள் இல்லை!
காரைக்குடி: காரைக்குடியில் இறந்த 2 பேரின் கண்களை குறித்த நேரத்தில் டாக்டர்கள் சென்று பெறாததால் கண்தானம் செய்தும் பலனில்லாமல் போனது. இதனால் 4 பேருக்கு பார்வை கிடைக்கும் வாய்ப்பும் பறிபோனது.
கண்தானம் செய்வதற்கு அரசு கண்வழி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் இறந்தவரிடம் பெறப்படும் கண்கள் மூலம் 2 பேருக்கு பார்வை அளிக்க வாய்ப்புள்ளது. தானம் செய்ய விரும்பவோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கண்தானம் குறித்து தெரிவிக்க வேண்டும்.
தானம் செய்ய விரும்பியவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் இறந்தவரின் கண்ணை 6 மணி நேரத்தில் சேகரித்து பாதுகாப்பாக வைக்கலாம். இறந்தவர்களிடம் பெறப்படும் கண்கள் மதுரை அரவிந்த் கண் வங்கியில் ஒப்படைக்கப்படும். இந்த கண்களை கண் டாக்டர்கள் மட்டுமே உரிய முறையில் எடுப்பார்கள்.
காரைக்குடியில் 2 நாட்களுக்கு முன்பு காஸ்மாஸ் லயன்ஸ் கிளப்பின் தலைவர் பத்மனாபன் மற்றும் பேராசிரியர் ஒருவரின் தாயார் இறந்தனர். உடனடியாக காரைக்குடி பகுதியில் உள்ள கண் டாக்டர்களுக்கு தகவல் தரப்பட்டது. ஆனால் அவர்கள் வரல்லை. மதுரை கண் வங்கியில் கேட்டபோது 30 கி.மீ. தொலைவிற்குள் இருந்தால் மட்டுமே தங்களால் வரமுடியும் என்று தெரிவித்துவிட்டனர்.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்களை எடுக்க முடியவில்லை. இதனால் 4 பேருக்கு பார்வை கிடைக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது. இதுகுறித்து காரைக்குடி காஸ்மாஸ் சங்க முன்னாள் தலைவர் சையது கூறுகையில், இதுவரை காஸ்மாஸ் சங்கம் சார்பில் 25 பேரிடம் கண் தானம் பெறப்பட்டு 50 பேர் பார்வை பெற்றுள்ளனர்.
ஆர்வம் இருந்தும் செய்ய முடியாமல் போகிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க அரசு டாக்டர்களை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். காரைக்குடி அரசு மருத்துவமனையில் கண் டாக்டர் கிடையாது. கண்தானம் செய்ய முடியாமல் போனது வருத்தமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications