தொடர் கொலைகள்-மேலும் 4 பேர் கைது
சென்னை: சென்னையில் நடந்த தொடர் கொலைகளை செய்த மேலும் 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். சைகோ கொலை என்று பீதி கிளம்பியதால் அதை பயன்படுத்தி தொடர்ந்து கொலைகளை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வடபழனி, அசோக்நகர் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடந்தன. இந்த கொலைகளை செய்த சுப்பு, கருப்புநாகு ஆகியோரை போலீஸார் முதலில் கைது செய்தனர். விசாரணையில் கூட்டாளிகள், 4 பேருடன் சேர்ந்து காவலாளி பாஷா, குமரன் நகர் கோவிந்தன், சாலையில் போதையில் கிடந்த
இரண்டு வாலிபர்களை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ராஜேஷ், ராஜன், அப்துல் ரஹீம், மேற்கு மாம்பலம் ராஜன் பிரபு ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், காவலாளி கருப்பழகி, போரூரில் வாலிபர் மணி ஆகியோரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
விசாரணையில் ஆட்டோ ராஜேஷ் கூறியிருப்பதாவது: எனக்கு சொந்தமாக 2 ஆட்டோக்கள் உள்ளன. தினமும் சவாரி முடித்து இரவு 8 மணிக்கெல்லாம் சீனிவாசா தியேட்டருக்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாள பகுதிக்கு வந்து விடுவேன். அங்கு கொத்தனார் ராஜன், பூ வியாபாரி ராஜன்பிரபு, பெயின்டர் அப்துல்ரஹீம், எனது நண்பர்கள் சுபாஷ், கருப்பு நாகராஜ், வெள்ளை நாகூரான் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்துவேன்.
பின்னர் அருகில் உள்ள தியேட்டருக்கு செகண்ட் ஷோ சினிமா பார்க்க செல்வோம். படம் முடிந்ததும் ஒரு மணிக்கு மேல் ஆட்டோவில் ஊரை சுற்றுவோம். அப்போது சாலையோரம் தூங்குவோரையும், போதையில் மயங்கி கிடப்பவர்களையும் தாக்கி பணம், வாட்ச், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விடுவோம்.
ஒருநாள் அதிகாலை 3 மணி அளவில் வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவிற்கு சென்றோம். அங்குள்ள கணேஷ் அப்பார்ட்ஸ்மென்ட் முன்பு காவலாளி கருப்பழகி தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் 3 பேர் உள்ளே நுழைந்தோம். அங்கிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடினோம்.
பின்னர் காவலாளி கருப்பழகியின் பையில் இருந்து பணம் எடுக்க முயன்றோம். அப்போது அவர் விழித்துக் கொண்டார். எங்களை பிடிக்க முயன்றார். அவரை காலால் மிதித்து கொலை செய்தோம். திருடிய பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்து விட்டு தப்பினோம்.
மறுநாள் ஒரு சைக்கோ' கொலைகாரன் காவலாளியை எரித்துக் கொன்று விட்டதாக செய்தி வந்தது. எங்கள் மேல் போலீஸூக்கு சந்தேகம் ஏற்படாது என்று நினைத்து அடுத்தடுத்த கொலைகளை செய்தோம்.
அப்போதும் சைக்கோதான் இந்த கொலைகளை செய்வதாக போலீசாரும் கூறினர்.
குமரன் நகரிலும் அதே பாணியில் வாலிபரை கொலை செய்தோம். பின்னர் போலீஸ் காவல் அதிகமானதால் போரூர் பகுதிக்கு சென்றோம். அங்கு போதையில் படுத்து கிடந்த மணி என்பவரிடம் ரூ.150ஐ திருடிவிட்டு அவரையும் கொலை செய்தோம்.
ஒருநாள் வடபழனியில் போலீஸார் சோதனை செய்து கொண்டிருந்தபோது மாட்டினோம். ஆனால் அப்போது பொதுமக்கள் சிலர் சைக்கோ மனிதனை விரட்டுவதாக ஓடினர். இதை பயன்படுத்தி எனது கூட்டாளிகள் 3 பேர் அந்த கும்பலோடு சேர்ந்து ஓடிவிட்டனர். நான் சவாரி சென்று திரும்புவது போல போலீஸ் சோதனையில் தப்பினேன்.
பின்னர் காவலாளி பாட்ஷாவை பணத்துக்காக கொன்றோம். இதுவரை 4 கொலைகள் செய்தோம். பலரிடம் வழிப்பறி செய்துள்ளோம் என்று கூறினார். இந்த கொலை கும்பலைச் சேர்ந்த வெள்ளை நாகூரான் மற்றும் ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications