18,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை-முன்கூட்டியே முடியும் கவுன்சிலிங்
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்குக்கு மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ளாததால், திட்டமிட்ட நாட்களுக்கு நான்கு நாள் முன்னதாகவே கவுன்சிலிங் முடிவடைகிறது.
அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி என்ன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஜூலை மாதம் 11ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்து 2வது கட்ட கவுன்சிலிங் தற்போது நடந்து வருகிறது. இதுவரை 53,938 இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 82 ஆயிரம் ஆகும்.
கவுன்சிலிங்கில் பங்கேற்க 72 ஆயிரத்து 517 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 54 ஆயிரத்து 216 பேர் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். 278 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு பின்னர் அப்படிப்பில் சேரவில்லை.
கடந்த ஒரு மாதமாக நடந்த கலந்தாய்வில் இதுவரை 18 ஆயிரத்து 301 பேர் கலந்து கொள்ளவில்லை. கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் ஐஐடி மற்றும் சிறந்த என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். முதல் கட்ட கவுன்சிலிங்கில் அரசு மற்றும் சிறந்த சுயநிதி கல்லூரிகள் நிரம்பிவிட்டன.
தற்போதைய நிலவரப்படி 54,000 இடங்கள் பூர்த்தியாகி விட்டன. இன்னும் 29,000 இடங்கள் மட்டும் இருக்கின்றன. இதற்கு 45,000 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 20,000 சீட்டுகள் நிரம்ப வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு போல 10,000 இடங்கள் காலியாக இருக்கும். 3வது கட்ட கவுன்சிலிங் 16ம் தேதி தொடங்குகிறது. 31ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி கணக்கிட்டால் 26ம் தேதி வரைதான் கவுன்சிலிங் நடக்கும்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் எத்தனை பேர் என்று இன்னும் முழுமையான தகவல் வரவில்லை. அதனால் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் 31ம் தேதிக்குள் ஏதாவது ஒருநாள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திட்டமிட்ட தேதிக்குப் பதிலாக, 4 நாட்களுக்கு முன்பே இந்த ஆண்டு கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications