ஜார்ஜியா-தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

Georgia-Abkhazia
பிலிசி: கடந்த ஒரு வார காலமாக ஜார்ஜியா மீது நடத்தி வந்த தாக்குதலை ரஷ்யா இன்று நிறுத்தியது.

முன்னதாக ஜார்ஜியாவின் ஓசேஷியா மற்றும் மேற்குப் பகுதியில் ஒரு படைத் தளத்தை கைப்பற்றிய ரஷ்யா, ஏற்கனவே ஜார்ஜியாவிடமிருந்து பிரிந்து போய்விட்ட அப்காஷியா மாகாணத்தின் வழியாகவும் நுழைந்து ஜார்ஜியாவை தாக்கி வந்தது.

இதனால் ஜார்ஜியா செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.

போர் நிறுத்தத்திற்கு ஜார்ஜிய அதிபர் மிக்கேல் சாக்ஸ்வில்லி ஒப்புக் கொண்டதை நிராகரித்து விட்ட ரஷ்யா, தொடர்ந்து ஜார்ஜியா மீது தாக்குதலை அதிகரித்து வந்தது.

நேற்று தாக்குதல் நடந்த பகுதிகளை மி்க்கேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அவரை நோக்கியும் ஒரு குண்டு வீசப்பட்டது. அவர் தப்பியோடி ஒரு வாகனத்தில் ஏறியதால் உயிர் தப்பினார்.

இந் நிலையில் ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வரும் அப்காஷியாவும் ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டு ஜார்ஜிய படைகளை தாக்கியது.

இதனால் தெற்கு ஓசேஷியாவைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்குள் ஜார்ஜிய படைகள் முடக்கப்பட்டு தேங்கி நின்றன.

ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியில் உள்ள சேனாகி என்கிற முக்கிய படைத் தளத்தையும் ரஷ்ய கவசப் படைகள் கைப்பற்றின. கருங்கடலில் உள்ள போடி துறைமுகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த சேனாகி பகுதி உள்ளது.

மேலும், ஸக்திதி பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றை யும் ரஷ்ய படைகள் பிடித்தன.

அப்காஷியாவும் அடிக்கிறது:

இதற்கிடையே, அப்காஷியா படைகள், ஜார்ஜியாவில் உள்ள குர்கா என்ற கிராமத்தை கைப்பற்றின.

ரஷ்யா பிடித்துள்ள சேனாகி, ஜார்ஜியாவுக்கு மிகவும் முக்கியமான பகுதி ஆகும். இது அப்காஷியாவையும், ஜார்ஜியாவின் பிற பகுதிகளையும் பிரிக்கும் பகுதியாகும்.

ரஷ்யாவின் போர்த் திட்டடம் குறித்து ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், தெற்கு ஒசேஷியாவைச் சுற்றிலும் ஜார்ஜிய படைகளை விரட்டுவதுதான் ரஷ்யாவின் முக்கிய குறிக்கோள். இதற்காகவே சேனாகி பகுதியை கைப்பற்றி அதன் வழியாக ஜார்ஜியாவுக்குள் ரஷ்யா ஊடுறுவி வருகிறது. இப்பிராந்தியத்தில் ஜார்ஜிய படைகளை முற்றாக விரட்டும் வரை ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தொடரும் என்றார்.

இருப்பினும் ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியங்களான ஒசேஷியா மற்றும் அப்காஷியா ஆகியவற்றை கைப்பற்றும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் படு வேக தாக்குதலால் மேற்கத்திய நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்தன. ரஷ்யாவை எப்படி தடுப்பது என்றும் தெரியாமல் அவை விழி பிதுங்கி நின்றன.

ஜார்ஜியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. இருப்பினும் ஜார்ஜியாவுக்கு எந்த வகையில் உதவுவது என்பதில் அமெரிக்காவிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜார்ஜியா மீதான தாக்குதலை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வந்தன.

இந் நிலையில் தாக்குதலை நிறுத்த இன்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்ய தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் ஜார்ஜியாவில் தற்போது ரஷ்யாவின் 500 டாங்குகள், 25 ஆயிரம் படை வீரர்கள் நிலை கொண்டுள்ளனர். ரஷ்யாவின் நிபந்தனைகளை ஜார்ஜியா ஏற்காவிட்டால் தாக்குதல் மீண்டும் தொடரலாம் எனத் தெரிகிறது.

ஜார்ஜிய அதிபர் ஒரு ஹிட்லர்- புடின்:

இதற்கிடையே, ஜார்ஜிய அதிபர் மிக்கேல் சாக்ஸ்வில்லியை ஹிட்லர், சதாம் உசேனுடன் ஒப்பிட்டு ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

சமரசத்திற்கு வரும் சர்கோஸி:

இந் நிலையில், ரஷ்யா, ஜார்ஜியா இடையே அமைதியை ஏற்படுத்தும் முகமாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, மாஸ்கோ மற்றும் பிலிசிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+