கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மறிப்பு-தமிழ் எழுத்துக்களை தார்பூசி அழித்து போராட்டம்
பெங்களூர்: கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு தமிழக அரசு எதிராக உள்ளதாகக் கூறி கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மீது தார் பூசி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னடம், தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தனிப்பட்ட முறையில் காந்தி தாக்கல் செய்த மனுவை தமிழகத்துடன் முடிச்சு போட்டு கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக தமிழக லாரி, வேன்கள், கார்கள், பஸ்களை குறி வைத்து சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
காந்தி போட்ட வழக்குக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்த பின்பும் இந்த போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பினர் சென்னபட்டணாவில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை மறித்து அவற்றின் கண்ணாடிகள் மீது தார் பூசினர்.
பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் தமிழக பதிவு எண் கொண்ட பஸ், லாரி, கார் ஆகிய வாகனங்களை மட்டும் வழி மறித்து நிறுத்தினர்.
வாகனங்களின் பதிவு எண் பலகையில் இருந்த டி.என் என்ற எழுத்துக்களை தார் பூசி அழித்தனர். மேலும் கண்ணாடிகள் மீதும் கன்னடம் வாழ்க என எழுதினர்.
மேலும் லாரிகள், பஸ்களில் இருந்த தமிழ் எழுத்துக்களையும் தார் பூசி அழித்தனர்.
பஸ்களும் இந்த போராட்டத்துக்கு தப்பவில்லை. இதனால் பயணிகள் பீதியுடன் இறங்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
போலீசார் மெதுவாக வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பின்னர் விடுவித்துவிட்டனர்.
கடந்த வாரம் சென்னபட்டணா மற்றும் தும்கூரில் கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் தமிழக லாரிகள் கல்வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications