சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க பரிந்துரை!
{image-Rippon Buildings250_13082008.jpg tamil.oneindia.com}சென்னை: இந்தியாவின் நான்காவது பெருநகரமான சென்னை மாநகராட்சி, மக்கள் தொகை மற்றும் அளவில் பெருத்துப் போயுள்ளதைத் தொடர்ந்து நெருக்கடியையும், நிர்வாக சிரமத்தையும் குறைக்கும் வகையில் 3 ஆக பிரிக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சூசகத் தகவலை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மாநகராட்சி விழா ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்கலாம் என அரசு நியமித்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தெற்கே தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியும், வடக்கே அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இன்னொரு மாநகராட்சியும் உருவாக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் மக்கள் நெருக்கத்ைத அடிப்படையாகக் கொண்டு இந்த பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
சென்னை மாநகராட்சி 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நகராட்சி நிர்வாகம் சென்னைதான்.
1607ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கிழக்கு இந்தியக் கம்பெனியினர் மெட்ராஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட சென்னை நகரத்தை நிர்மானித்து அறிவிக்கை வெளியிட்டனர். அப்போது 33 வார்டுகளாக சென்னை மாநகரத்தைப் பிரித்தனர். தற்போது சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன.
1921ம் ஆண்டு சென்னை நகரின் மக்கள் தொகை 5 லட்சம்தான். தற்போது கிட்டத்தட்ட 50 லட்சத்தைத் தாண்டி விட்டது.
சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 1921ம் ஆண்டு 27.6 சதுர மைல்களாக இருந்தது. தற்போது 174 சதுர கிலோமீட்டர்களாக வியாபித்துள்ளது.












Click it and Unblock the Notifications