'குண்டாஸ்'-மறு ஆய்வு குழு முன் காடுவெட்டி குரு!
சென்னை: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்ட மறு ஆய்வுக் குழுவின் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வன்னியர் சங்கத் தலைவரும், பாமக பொருளாளருமான காடுவெட்டி குரு 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது.
இதை எதிர்த்து தேசிய பாதுகாப்பு சட்ட மறு ஆய்வு குழுவில் குரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட மறு ஆய்வு குழு, குருவை தங்கள் முன் இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து காடுவெட்டி குருவை திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்று இரவு போலீஸார் சென்னை கொண்டு வந்தனர். புழல் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
இன்று பகல் 1 மணியளவில் குரு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கூவம் பயணியர் விடுதியில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்ட மறு ஆய்வு குழு முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
குரு வேனை மறிக்க பாமகவினர் முயற்சி:
முன்னதாக நேற்றிரவு திருச்சி சிறையில் இருந்து சென்னைக்கு குரு கொண்டு செல்லப்படும் தகவல் பாமகவினரடையே பரவியது. இதையடுத்து சிறையில் இருந்து குரு எழுதிய கடிதங்களை பாமகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
அதில், அன்பு நெஞ்சங்களே, என் உடலை சிறையில் அடைத்தாலும், உயிரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது. மாபெரும் லட்சிய வெற்றிக்கு உயிரே, உணர்வே, பொங்கி எழு. திருச்சி மத்திய சிறையில் இருந்து காடுவெட்டி குரு. என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் விழுப்புரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
காடுவெட்டி குரு அழைத்து வரப்பட்ட வேன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில உணவுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது மேல்மலையனூர் பாமக எம்எல்ஏ செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் குருவை சந்தித்தனர்.
விழுப்புரத்தில் குரு வரும் வேனை மறித்து அவரை சந்திக்க சுமார் 50 பாமகவினர் காத்திருந்தனர். ஆனால் போலீசார் வேனை நிறுத்தாமல் சென்றனர். இதுபோல அங்கங்கு பாமகவினர் வேனை மறிக்க முயன்றதால் திண்டிவனம் வழியாக செல்லாமல் புதுச்சேரி சென்று அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக குரு சென்னை கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications