சுரேஷ்ராஜன்-அதிமுக வழக்கு: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை: அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளிக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அன்று அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், சப்-கெலக்டர் ஜனார்த்தனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சப்- கலெக்டர் ஜனார்த்தனன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்தைக்கு பிறகு போலீசார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர்கள் தமிழ்செல்வன், கிருஷ்ணதாஸ் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடந்த 5.8.2008 மற்றும் 6.8.2008 ஆகிய தினங்களில் அமைதி போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்துவிட்டனர். இது, ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே அமைதியான வழியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பதில் அளிக்க கன்னியாக்குமரி எஸ்பி, டிஎஸ்பி நேசமணி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications