கேரளா: கன்னியாஸ்திரி தற்கொலை-பாலியல் சித்திரவதையா?
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடிவிசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்லம் மாவட்ட பிஷப் வீட்டில் சமையல்காரராக இருப்பவர் பாப்பச்சன். இவரது மகள் அனுபா. 23 வயதான அனுபா கன்னியாஸ்திரி ஆவார். கொல்லத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அப்பள்ளியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு அனுபா தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அறையில் வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், இங்குள்ள சூழலுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. மதர் சுப்பீரியருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார் அனுபா.
ஆனால் தனது மகள் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக பாப்பச்சன் குற்றம் சாட்டியுள்ளார். மகளுடன் தங்கியிருந்த ஒரு கன்னியாஸ்திரி, ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அச்சுதானந்தனையும் சந்தித்து அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்துஅவர் கூறுகையில்,அங்குள்ள கன்னியாஸ்திரி ஒருவர் எனது மகளுடன் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தனது டைரியில் எனது மகள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அனுபா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில மகளிர் ஆணையமும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications