ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பணியிடங்களை குறைத்த ஹெச்டிஎப்சி வங்கி.. தனியார் வங்கிகளில் பெரிய மாற்றம்
சென்னை: ஹெச்டிஎப்சி வங்கி கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் 8 ஆயிரம் பணியிடங்களை குறைத்திருக்கிறதாம். ஒரு ஏஐ மாற்றத்தின் மூலம் இந்த மாற்றங்களை ஹெச்டிஎப்சி வங்கி நிகழ்த்தி உள்ளது. பொதுத்துறை வங்கிகளை விட அதிகம் பேருக்கு வேலை தந்து வந்தது தனியார் வங்கிகள் தான். ஆனால் தனியார் வங்கிகள் ஏஐ ஆப்களை அறிமுகம் செய்வதுடன், ஊழியர்களின் சம்பள பணத்தை மிச்சம் செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளன.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளைவிட தற்போது தனியார் வங்கிகளே அதிகமாக உள்ளன. கிளைகளின் படி பார்த்தால் பொதுத்துறை வங்கிகள் தான் அதிக கிளைகளை வைத்துள்ளன. ஆனால் நாட்டில் உள்ள 21 தனியார் வங்கிகள் மிகப்பெரிய அளவில் வங்கி சேவைகளை செய்து வருகின்றன. பங்குச்சந்தை நிலவரப்படி அனைத்து தனியார் வங்கிகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாக இருக்கிறது.

அதேபோல் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை பொதுத்துறை வங்கிகளை விட அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 9 லட்சம் பேர் தனியார் வங்கிகளில் பணியாற்றுகிறார்கள். நிதித்துறையில் பணியாற்ற வேண்டும் என்று படித்து முடித்துவிட்டு வருவோருக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க தனியார் வங்கிகளே காரணமாக உள்ளன.
ஆனால் மனிதன் திரும்ப திரும்ப செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் ஏஐயை வைத்து தானியங்கி முறைக்கு பல நிறுவனங்கள் மாற தொடங்கின. அந்த லிஸ்டில் வங்கிகளும் இணைய தொடங்கிவிட்டன. இதனால் கடந்த சில ஆண்டுகளில் தனியார் வங்கிகள் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதம் அடியோடு மாற தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, மறுபக்கம் செயற்கை நுண்ணறிவு காரணமாக முன்னணி வங்கிகள் தனது பணியிடங்களை குறைக்க தொடங்கி உள்ளன.
கடந்த நிதியாண்டில் (2025-26) தங்களது ஒட்டுமொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக முன்னணி தனியார் வங்கிகள் குறைத்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி. கடந்த 9 ஆண்டுகளில் முதன்முறையாகப் பணியாளர்கள் எண்ணிக்கை 3,343 குறைந்து, மொத்தம் 2.11 லட்சமாக மாற்றியிருக்கிறது. 'நீவ்' என்ற ஏ.ஐ. தளம் மூலம் வழக்கமான பணிகள் தானியங்கி முறையாக மாற்றியதுன். அதன் காரணமாக மேற்பார்வை அல்லாத கீழ்நிலை ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் மேல் குறைந்திருக்கிறது..
அதேபோல் கடந்த நிதியாண்டில் புதிதாக 400 கிளைகளைத் திறந்த ஆக்சிஸ் வங்கி, ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக பணியாளர் எண்ணிக்கையை 3,100 வரை குறைந்து 1.01 லட்சமாகம மாற்றியிருக்கிறது. கோடக் மகேந்திரா வங்கி பணியாளர்கள் எண்ணிக்கை ஓராண்டில் 1,269 குறைந்திருப்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
தனியார் வங்கிகளில் தற்போது கணக்கு பராமரிப்பு, ஆவண சரிபார்ப்பு மற்றும் பரிவர்த்தனைகள் போன்ற வழக்கமான பின்அலுவலகப் பணிகளை ரோபோடிக்ஸ் மற்றும் ஏ.ஐ. கவனித்துக் கொள்வதால் வங்கிகளில் மனிதர்களுக்கு வேலை கிடைப்பது குறைந்து வருகிறது. வங்கிகள் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு மட்டுமே வேலைக்கு ஆட்களை எடுக்கின்றன.














Click it and Unblock the Notifications