ராஜ்யசபா எம்.பியாக ரங்கராஜன் நியமனம் - அடுத்து அமைச்சர்?
டெல்லி: சமீபத்தில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த சி.ரங்கராஜன் நேற்று ராஜ்யசபா நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் மத்திய அமைச்சராகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், பின்னர் ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்தவர் நிதித்துறை நிபுணரான சி.ரங்கராஜன். ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் பிரதமருக்கான பொருளாதார
ஆலோசனைக் கவுன்சிலின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பதவியை ரங்கராஜன் ராஜினாமா செய்தார். அவர் எம்.பியாக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று ராஜ்யசபா நியமன உறுப்பினராக ரங்கராஜன் நியமிக்கப்பட்டார்.
நிர்மலா தேஷ்பாண்டே மறைவினால் காலியாக இருந்த இடத்தில் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ரங்கராஜன் அமைச்சர் பதவியில் அமர்த்தப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதாரத் துறைநிபுணரான ரங்கராஜன் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
12வது நிதிக் கமிஷனின் தலைவராகவும் இருந்துள்ளார். பத்மபூஷன் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.
எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரங்கராஜன் கூறுகையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத் துறை குறித்த விவாதங்களின்போது எனது கருத்துக்களை எடுத்து வைப்பேன். நாட்டில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவு தருவேன் என்றார்.
பொருளாதாரத் துறை கவுன்சில் தலைவராக இருந்தபோது, சிறப்பு பொருளாதார மண்டலம், பெட்ரோலியப் பொருள் விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் ரங்கராஜன் அரசுக்கு ஆலோசனைகள் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications