மருத்துவ கல்லூரிகள்: அரசு துணை போவதன் ரகசியம் என்ன?-விஜய்காந்த்
சென்னை: மருத்துவ கல்லூரிகள் தொடங்க எந்த அடிப்படையில் தடையில்லா சான்று வழங்கப்படுகிறது, அவ்வாறு வழங்கும்போது குறிப்பிட்ட இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என்று ஏன் நிபந்தனை விதிக்கக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர் கல்வியில் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்லை. உயர் கல்வி நிலையங்களை தனியார் நடத்தினால் ஏழைகளுக்கு இடம் கிடைக்காது என்பதால்தான் அரசுக் கல்லூரிகளை தனியார் மயமாக்க வேண்டாம் என்று கூறுகிறேன். அரசாங்கமே சொந்தமாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்தினால் நலிவுற்ற இந்த பிரிவினருக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும்.
தற்போது செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறி விட்டதால் கடந்த ஆண்டு அவர்கள் அரசுக்கு வழங்கிய 83 இடங்கள் இந்த ஆண்டு இல்லாமல் போய்விட்டன. அங்கு இட ஒதுக்கீடு முறையையும் அமல் செய்ய முடியாது.
கடந்தாண்டு 5 மருத்துவ கல்லூரிகள் தொடங்க தமிழ்நாடு அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. சவீதா பல்கலைக்கழகம், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி உள்ளிட்ட எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
இதில் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி அரசுக்கு இடங்கள் தந்துள்ளது.
மற்ற இரண்டும் பல்கலைக்கழகங்கள் என்பதால் அரசுக்கு இடம் தரவில்லை. கற்பக விநாயகர் மற்றும் சத்தியசாய் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளன.
மருத்துவ கல்லூரிகள் தொடங்க அரசு எந்த அடிப்படையில் தடையில்லா சான்றிதழ் வழங்குகிறது என்பது தெரியவில்லை. அத்தகைய சான்றிதழ்கள் வழங்குகின்றபோது, ஒரு குறிப்பிட்ட சதவிகித இடங்களை அரசுக்கு வழங்க வேண்டுமென்று ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது?.
தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்கும்போது அரசுக்கு இடங்களை தந்துவிட்டு, பிறகு நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று மாற்றி விட்டு, ஏற்கனவே தந்த இடங்களையும் தர தனியார்கள் மறுக்கிறார்கள். இதற்கு அரசும் துணை போவதன் ரகசியம் என்ன?.
சில மாநிலங்களில் நிபந்தனையோடு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுவது தமிழ்நாடு அரசுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதா? தெரிந்தே மறைத்து விட்டார்களா?. இதை முன்பு நான் சொன்னபோது உயர்கல்வித் துறை அமைச்சர் பல மறுப்பு அறிக்கைகள் வெளியிட்டார்.
இன்று தனியார் வாசலில் இழந்த மருத்துவ இடங்களைப் பெற அரசே காத்து கிடப்பதிலிருந்து நான் சொன்னது சரியாகிவிட்டது அல்லவா?. ஏழை, எளிய மக்களை எத்தனை காலத்திற்குத்தான் ஏமாற்றுவது? என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications